வெள்ளி, 16 மே, 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 3



அன்பு Nizar Mohamed அவர்களது தொடர் 1 க்கான எனது பதில்..

ஈஸா நபி உயிருடன் தான் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரத்தை காட்டு என்று கேட்டிருக்கிறீர்கள். இந்த கேள்வியை கேட்கலாம், தவறில்லை, ஆனால் எப்போது இதை கேட்க வேண்டும் என்றால், இதற்கு முன்பே நான் இது தொடர்பாக ஒரு கேள்வியை தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருக்கிறேனே, அதற்கு முறையான பதிலை சொல்லி முடித்து விட்டு இதை கேட்கலாம்.
நான் என்ன கேட்டுக் கொண்டிருக்கிறேன்?

ஈசா நபி இறந்து விட்டார்கள், மீண்டும் இவ்வுலகிற்கு வர மாட்டார்கள் என்பது உங்கள் நிலைபாடு. அப்படியானால், ஹதீஸ்கள் குறித்த உங்கள் நிலைபாடு என்ன?
குர் ஆன் மட்டும் தான் அல்லாஹ்விடமிருந்து வந்தது, ஹதீஸ்கள் அல்லாஹ்விடமிருந்து வந்தவை இல்லை என்கிற கொள்கை கொண்டவரா நீங்கள்?
ஹதீஸ்களிலே, ஈஸா நபியின் மீள்வருகை பற்றி சொல்லப்பட்டுள்ளது, 
அவரது வருமை என்பது கியாமத் நாளின் முக்கிய பத்து அடையாளங்களுல் ஒன்று என்று நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
அவர் இவ்வுலகில் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்வார் என்று சொல்லியிருக்கிறார்கள்.
தஜ்ஜாலை அவர் தான் கொல்வார் என்றும், ஜிஸ்யா வரியை ஒழிப்பார்கள் என்றும் பல வகைகளில் ஈஸா நபியின் வருகை பற்றி ஹதீஸ்கள் விளக்குகின்றன.

இந்த ஹதீஸ்கள் எல்லாம் குப்பைகளா? இதையெல்லாம் அல்லாஹ்வின் வஹி என ஏற்க மாட்டீர்களா? அல்லது இதற்கு வேறு விளக்கங்கள் வைத்திருக்கிறீர்களா?

என்கிற இந்த கேள்வியை நான் பல நாட்களாக கேட்டு வருகிறேன். இதற்கு இதுவரை எந்த பதிலையும் சொல்லாத நீங்கள், இன்றைக்கு, 
"
இது மார்க்கத்தை நீ விளையாட்டாக ஆக்கிவிட்டாய் என்பதை காட்டுகிறது"

என்று ஒற்றை வரியில் விமர்சனம் செய்கிறீர்கள்.

இது எப்படி மார்க்கத்தை விளையாட்டாய் நான் கருதுவதாய் ஆகும்?
ஹதீஸில் நபி மீண்டும் வருவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறதே, அதை நான் நம்புகிறேனே, நீங்கள் அதை நம்பவில்லையா?
என்று கேட்கிற கேள்வி விளையாட்டா? அல்லது, ஹதீஸில் இருப்பதற்கு எந்த பதிலையுமே சொல்லாமல் அதற்கு முரணான கொள்கையை மனதில் கொண்டிருப்பது விளையாட்டா? 
எது விளையாட்டு அன்பு சிறிய தந்தையே ??

அன்பு Nizar Mohamed அவர்களது தொடர் 2 க்கான பதில்

ஈஸா நபி இறந்து விட்டார் என்பதை நிரூபிக்க மிகவும் வேடிக்கையான ஆதாரம் ஒன்றை சொல்லியுள்ளீர்கள்.

////
மர்யமின் மகன் masih ஒரு தூதரே அன்றி வேறில்லை.. நிச்சயமாக அவருக்கு முன்னுள்ள தூதர்கள் மரணமடைந்து விட்டனர்..” என்று ஏனைய நபிமார்களை போன்று ஈஸா நபி மரணமடைந்து விட்டார் என குரான் தெளிவாக கூறியிருந்தும் நீங்கள் கண்டுகொள்ளாமல்...////

ஈஸாவுக்கு முன்னுள்ளவர்கள் இறந்து விட்டார்கள் என்கிற வசனத்தை எடுத்துக் காட்டி, பார்த்தீர்களா, ஈஸா இறந்து விட்டார் என்று அல்லாஹ் சொல்கிறான் என்கிறீர்கள்.

ஈஸா நபிக்கு முன்னுள்ளவர்கள் இறந்து விட்டார்கள் என்று சொன்னால் அது ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்கிற அர்த்தத்தை தரும் என்பதை எந்த பள்ளிக்கூடத்தில் தமிழ் கற்றால் நான் ;புரியலாம் என்பதை எனக்கு அறியத்தரவும்.

அத்துடன், மற்றுமொரு பலகீனமான வாதத்தையும் பல இடங்களில் வைக்கிறீர்கள். ஈஸா நபி இறக்கவில்லை என்று சொல்வது ஷிர்க்காம்..
எப்படி ஷிர்க்? அடிப்படை புரியாததால் தான் இது போன்ற மேலோட்டமான வாதம் உங்களிடமிருந்து எழுகிறது.

ஒருவர் நோய் வாய்ப்படுகிறார், சக்கராத் நிலையில் படுக்கிறார், திடீரென பேச்சு, மூச்சு இல்லை. இறந்து விட்டார் என்று அனைவரும் எண்ணுகிறார்கள். நாடித் துடிப்பை பார்த்த இன்னொருவர், இல்லை, அவர் இன்னும் இறக்கவில்லை என்று சொல்கிறார்.
என்னது? ஒரு மனிதனை பார்த்து, அவர் இறக்கவில்லை என்று சொல்வதா? அய்யகோ, இது ஷிர்க் அல்லவா? எவ்வளவு பெரிய தவறை செய்து விட்டாய் என்று தான் அவரைப் பார்த்து சொல்வீர்களா?

ஒருவர் இப்போது இறக்கவில்லை, இனிமேல் தான் இறப்பார் என்று சொல்வதற்கும், இப்போதும் இறக்கவில்லை, எப்போதும் இறக்கவே மாட்டார் என்று சொல்வதற்கும் வேறுபாடு இல்லையா? 

இன்றைய தேதி வரை ஈசா நபி இறக்கவில்லை, ஆனால் அவர் ஒன்றூம் நித்திய ஜீவன் இல்லை, அவரும் இறக்கக்கூடியவர் தான். அவரது ஆயுள் நீட்டிக்க்ப்பட்டிருக்கிறது, அவ்வளவு தான்.
உலகம் அழியும் முன் எல்லா மனிதர்களையும் போன்று அவரும் இறக்கத் தான் போகிறார். நித்திய ஜீவன் அல்லாஹ் ஒருவன் தான்.

இப்படி புரிகையில் ஷிர்க் எங்கே நுழைகிறது? தவ்ஹீதில் என்ன குழப்பம்?
இந்த நம்பிக்கை எப்படி பிற மத கலாச்சாரமாகும்?

கிறித்தவர்களும் உலகம் ஒரு நாள் அழியும் என்பதை நம்புகிறார்கள், Nizar Mohamed அவர்களும் நம்புகிறார், ஆகவே Nizar Mohamed அவர்கள் கிறித்தவ கலாச்சாராத்தை பின்பற்றுகிறார் என்று உடும்பு, பொந்து ஹதீஸை நானும் சொல்வேனே? ஏற்றுக் கொள்வீர்களா?

கிறித்தவர்களும் சொர்க்கம், நரகம் இருப்பதை நம்புகிறார்கள், Nizar Mohamed அவர்களும் நம்புகிறார், ஆகவே Nizar Mohamed அவர்கள் கிறித்தவ கலாச்சாராத்தை பின்பற்றுகிறார் என்று நானும் சொல்வேனே? ஏற்றுக் கொள்வீர்களா?

இதுவா வாதம்? ஹிந்துவும் சோறு சாப்பிடுகிறான், நானும் சாப்பிடுகிறேன், ஆகவே இனி யாரும் சோறு சாப்பிடாதீர்கள் என்பது போல் உள்ளது உங்கள் வாதம்.

ஆக, அர்த்தப்பூர்வமாக வாதம் புரியுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்பு Nizar Mohamed அவர்களது தொடர் 3 க்கான பதில்

மிர்சா சாஹிப் நபி தான் என்பதற்கு என்ன சான்று என்று கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக உங்களிடம் கேட்டு வருகிறேன்.
பதில் என்கிற பெயரில் 7:36 வசனத்தை காட்டுகிறீர்கள். அல்லாஹ்வின் தூதரின் கட்டளைகளை பேணி நடப்போருக்கு அச்சமில்லை என்று இதில் அல்லாஹ் சொல்கிறான்.

இதிலிருந்து, மிர்சா சாஹிப் தான் அல்லாஹ்வின் நபி என்று எப்படி நிரூபணம் ஆகிறது என்பதை விளக்குங்களேன்.

40:3
வசனத்தை காட்டுகிறீர்கள். 
யூசுஃப் நபிக்கு பிறகு இன்னொரு நபி வருவார் என்று சொல்கிற வசனம் இது. 
இதை வைத்து மிர்சா சாஹிப் தான் அல்லாஹ்வின் நபி என்று எப்படி நிரூபணம் ஆகிறது?

யூசுஃப் நபிக்கு பிறகு வேறு நபி வருவார் என்பதால் முஹம்மது நபிக்கு பிறகும் வேறு நபி வருவார் என்று புரிவேன் என்றால் இது புரிதலா அபத்தமா??

புஹாரி 3455 இல் குறிப்பிட்ட இடைவெளியில் நபி வரமாட்டார் என்று தான் புரியவேண்டும் என்கிறீர்கள்.

குறிபிட்ட இடைவெளி என்று ஹதீஸில் புரிய இடமில்லை. அது உங்களது இடைச்செருகல். 

நிச்சயமாக எனக்குப் பிறகு வேறு நபி இல்லை என்று தெள்ளத் தெளிவாக சொல்லும் ஹதீஸ் இது.

இதை மெய்ப்படுத்தும் மற்றொரு சான்றையும் இங்கே பார்ப்போம்.

'
தூதுத்துவமும், நபித்துவமும் முற்றுப் பெற்றுவிட்டன. எனவே எனக்குப் பின் எந்த நபியும் இல்லை. எந்த ரஸூலும் இல்லை' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். இது மக்களுக்கு கவலையளிப்பதாக இருந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எனினும் நற்செய்தி கூறுபவை உண்டு' என்றார்கள். நற்செய்தி கூறுபவை என்றால் என்ன என்று நபித்தோழர்கள் கேட்ட போது 'முஸ்லிம் காணுகின்ற கனவாகும்' என்று விளக்கினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: அஹ்மத் 13322

இந்த ஹதீஸும், முஹம்மது நபிக்கு பிறகு ஒரு நபி வர மாட்டார் என்று தெளிவாக சொல்கிறது.

பிளேக் நோய் பற்றி குர் ஆனில் சொல்லப்பட்டிருப்பதாக மிர்சா சாஹிப் சொல்லியிருக்கிறாரே, அது எந்த வசனம்? என்று கேட்டிருந்தேன். 
அவர் தெரியாமல் சொல்லி விட்டார் என்று சொல்வீர்கள் என்று பார்த்தால் இதோ குர் ஆனில் பிளேக் நோய் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்லி 27:83 வசனத்தை காட்டுகிறீர்கள்.

இதை துணிச்சல் என்று சொல்வதா? அல்லது அல்லாஹ்வின் மீது இட்டு கட்டும் தன்மை என்று சொல்வதா? எனக்கு புரியவில்லை.

27:83
வசனத்திற்கும் பிளேக் நோய்க்கும் என்ன தொடர்பு? அதிலெங்கே பிளேக் பற்றி வருகிறது?

குர் ஆன் என்ன, மிர்சா சாஹிப் எழுதிய நூல் போல ஒளித்து வைத்திருக்கும் நூலா, யாருக்கும் தெரியாது என்று நினைக்க??

மிர்சா சாஹிபுக்கு முட்டுக் கொடுக்கிறோம் என்கிற பெயரில் அல்லாஹ்வின் மீது நீங்கள் இட்டுக் கட்ட துணிகிறீர்களா?
இந்த அசாத்திய துணிச்சலை உங்களுக்கு தந்தது எது? அஹமதியா கொள்கையா??


மிர்சா குலாம் சாஹிப் எப்படி நபியானார்? அவர் அல்லாஹ்வின் வசனங்களை பெறுபவர் என்பதற்கு என்ன ஆதாரம்? என்றெல்லாம் கேட்கிற போது, ஆதாரத்தை வரிசையாய் தருவதை விட்டு விட்டு, 
முஹம்மது நபிக்கு பிறகும் நபி வருவார், யூசுஃப் நபிக்கு பிறகு நபி வருவார் என்றெல்லாம் சம்மந்தா சம்மந்தமில்லாத பதில்களை தான் அஹமதியா கொள்கையை ஏற்றிருக்கும் Nizar Mohamedஅவர்களிடம் காண முடிகிறது.

முஹம்மது நபி தான் அல்லாஹ்வின் இறுதி தூதர் என்பதும், அவர்களுக்கு பிறகு வேறெந்த தூதரும் வரப்போவதில்லை என்பதும் தெள்ளத் தெளிவான ஒன்று என்பது ஒரு பக்கம் இருக்க, நபித்துவம் முற்றுப் பெறவில்லை என்று ஒரு வாதத்திற்கு ஒப்புக்கொண்டால் கூட, முஹம்மது நபிக்கு பிறகுள்ள நபி மிர்சா சாஹிப் தான் என்பதற்கு என்ன சான்று?

நான் தான் அல்லாஹ் என்று சொன்ன ஒருவர் எப்படி அல்லாஹ்வின் நபியாக இருப்பார்? 
நியாயப்படி அவர் ஃபிரவ்னின் இளைய தம்பியாக அல்லவா இருக்க வேண்டும்??

என்று கேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் இதுவரை விடை சொல்லவில்லை.

குர் ஆனில் பிளேக் நோய் பற்றி அல்லாஹ் சொல்கிறான், அதுவும் மசீஹ் வரும் போது பிளேக் நோய் பரவும் என்று அல்லாஹ் சொல்கிறான் என்று அல்லாஹ்வின் பெயரால் கதையளந்தவர் நியாயப்படி அபு ஜஹலின் ஒன்று விட்டமச்சினனாக வேண்டுமானால் இருப்பாரே தவிர அவர் எப்படி நபியாக இருப்பார்?

என்று கேட்டதற்கும் பதிலில்லை. 

இன்னும், இந்த சாஹிபை பற்றி நாம் அடுக்கடுக்காக எழுப்ப இருக்கும் எந்த கேள்விக்கும் நீங்கள் சரியாய் எந்த பதிலையும் சொல்ல மாட்டீர்கள் என்றும் எனக்கு தெரியும்.

ஈஸா நபி இறந்தாரா இல்லையா? இதை எம்மோடு பேசுவதற்கு தான் உங்களுக்கு மிகவும் ஆர்வம். உங்கள் ஆர்வத்திற்கான நோக்கமும் எனக்கு தெரியும்.

இதை தான் முதலில் பேச வேண்டும் என்றால் அதற்கும் நான் தயார் தான். 
அதன் முதல் கட்டமாக தான், ஈஸா நபியின் மீள் வருகை குறித்து ஹதீஸ்கள் பல சொல்கின்றனவே, அவைகள் பற்றிய உங்கள் நிலை என்ன? என்று கேட்டிருந்தேன்.

ஈஸா நபியின் வருகை கியாமத் நாளின் இறுதி பத்து அடையாளங்களுல் ஒன்று.
அவர் இவ்வுலகில் நேர்மையான முறையில் ஆட்சி புரிவார்
அவர் காலத்தில் ஜிஸ்யா வரி விலக்கப்படும்
பன்றியை அவர் கொல்வார்
தஜ்ஜாலை அழிப்பார்
அவர் நபியாக வர மாட்டார்
அவர் வரும் போது ஒட்டகங்கள் சவாரி செய்யப்படாமல் விடப்படும்
பொய்யும் கபடங்களும் ஒழியும்
மரணிப்பதற்கு முன் அவர் ஹஜ்ஜும் செய்வார்

என்றெல்லாம் ஏராளமான ஹதீஸ்கள் உண்டே, அவைகள் பற்றிய உங்கள் பார்வை என்ன?

என்கிற இந்த கேள்வியை கிட்டதட்ட நான்காவது முறையாக உங்களை நோக்கி வைக்கிறேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக